ஸ்கேன் செய்வதற்கான செலவை 70 சதவீதம் குறைக்கும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் MRI இயந்திரத்தை பெங்களூரைச் சேர்ந்த ‘Voxelgrids’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது; இந்நிறுவனத்தை ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கைப்பற்றும் முயற்சியிலிருந்து டாடா மற்றும் வேம்புவின் ‘Zoho’ நிறுவனங்கள் எவ்வாறு காப்பாற்றின? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக அளவில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளே MRI தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்தும் MRI இயந்திரங்களை இந்த நாடுகளின் ஒரு சில பெரு நிறுவனங்களே தயாரித்து விநியோகம் செய்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருக்கும் ஒவ்வொரு எம்.ஆர்.ஐ ஸ்கேனரும் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது சுமார் 5,000 எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் மட்டுமே உள்ளன
சராசரியாக ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய கிட்டத்தட்ட 10,000 ரூபாய் செலவாகும் நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஒரு மருத்துவச் செலவாகவே உள்ளது.
நோயறிதல் பரிசோதனைக்கு மிகவும் தேவை என்ற அவசியம் காரணமாக எல்லா மருத்துவ மனைகளும் சி.டி ஸ்கேனர் வாங்கும் போதே எம்.ஆர்.ஐ ஸ்கேனையும் வாங்க விருப்பம் காட்டிவருகின்றன.
இந்தியாவில் எம்ஆர்ஐ -யை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான சிடி ஸ்கேனர்கள் உள்ளன. இதற்கு இறக்குமதி செய்யப்படும் எம்ஆர்ஐ கருவிகளை வாங்குவதற்கும், நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் செலவு அதிகமாகிறது என்பதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சூழலில் மருத்துவத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக பெங்களூரைச் சேர்ந்த ‘Voxelgrids’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவின் முதல் MRI இயந்திரத்தை உருவாக்கி வருகிறது.
MRI ஸ்கேன் செலவை சுமார் 70 சதவீதம் குறைப்பதோடு, மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த MRI இயந்திரம் 40 சதவீத குறைந்த விலையிலும், 50 சதவீத குறைவான எடையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மென்பொருள் முதல் மின்னணுவியல் வரை அனைத்தும், வெறும் நான்கு பொறியாளர்களிலிருந்து தற்போது 33 ஆக வளர்ந்துள்ள ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் நிறுவனத்திற்குள்ளேயே முழு இயந்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான MRI அமைப்புகளில் காணப்படும் கேபிள்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கையே பயன்படுத்தும் இந்த MRI இயந்திரம் மின்னணு பேக்கேஜிங்கில் கணிசமாகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
மிக முக்கியமாக, உலகின் மிகவும் விலையுயர்ந்த, புதுப்பிக்க முடியாத வாயுக்களில் ஒன்றான ஹீலியத்திற்குப் பதிலாக நைட்ரஜனைப் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. இந்த ஹீலியத்தைத்தான் MRI இயந்திரங்களுக்காக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனமும் ஒரு கட்டத்தில் பணத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதற்கு ஏற்ப Voxelgrids-வோக்சல்கிரிட்ஸ் நிறுவனத்துக்கும் முதலீட்டுத் தேவை ஏற்பட்டதாக அதன் நிறுவனர் அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும் சிறிய உற்பத்தியாளர்களை விழுங்கி, தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பல பன்னாட்டு நிறுவனங்கள் Voxelgrids-யையும் அணுகி கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சலுகையை முன்வைத்ததாக கூறியுள்ளார்.
ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்வது, தான் உருவாக்க முயன்ற அந்தப் புதுமையான தொழில்நுட்பத்தையே இழக்க நேரிடும் என்பதால் அந்த சலுகையை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளதாக அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
மேலும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோரின் நிதி உதவியே இந்தியாவின் முதல் உள்நாட்டு MRI ஸ்கேனரை உருவாக்கும் வரை தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிலைத்திருக்க செய்ததாக அருணாசலம் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தேசிய பயோஃபார்மா மிஷன்’ (National Biopharma Mission) மூலம் கிடைத்த அரசு நிதி, இந்தத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உதவியதாகவும் கூறியுள்ளார்.
வோக்சல்கிரிட்ஸ் நிறுவனம் தற்போது தனது பெங்களூரு ஆலையில் ஆண்டுக்கு 20 முதல் 25 எம்.ஆர்.ஐ ஸ்கேனர்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
12 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்த 1.5-டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேனர், “நாக்பூர்” அருகே உள்ள சந்திராபூர் புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளையில் நிறுவப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைத்து, அணுகலை மேம்படுத்தி, உள்நாட்டுப் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள நோயறிதல் சார்ந்த சுகாதார சேவைகளை மாற்றியமைக்கும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
















