திமுக பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் என துரைமுருகன் உறுதியாக இருப்பதால், இணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்ததால் கட்சி அமைப்புகளை முழுமையாக மாற்றி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்கவும், அவரது பதவியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், பதவியை விட்டு விலக மாட்டேன் என துரைமுருகன் பிடிவாதமாக உள்ளதாகவும், 2027 வரை பதவிக்காலம் உள்ளதால் பொதுச்செயலர் பதவியை விட்டுத் தரமாட்டேன் என்று கூறியதாகவும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகாமல் துரைமுருகன் அடம் பிடிப்பதால், கட்சியில் இணை பொதுச்செயலாளர் என்ற புதிய பொறுப்பை உருவாக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















