இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் 56 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பதால், விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விநியோகம் செய்யும் வகையிலான முன்னோடி திட்டத்தை வகுக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரஷாந்த் குமார் மிஸ்ரா அமர்வு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் எண்களைக் கண்டறிந்து, அவற்றை ‘வாஹன்’ இணையதளம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தரவுத்தளத்துடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படும் வரை எரிபொருள் வழங்கக்கூடாது எனவும், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















