தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடந்ததாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள சேதுராஜ் மற்றும் கார்த்திக்கும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு சுயாதீன விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கில் தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குதிரை பேரம் வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
















