மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்ய தனியார் அறக்கட்டளை மூலம் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலம் முறைகேடாக பட்டா மாற்றி பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு தாசில்தராக பணியில் இருந்த தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியர் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன் உட்பட 19 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கறம்பக்குடி பகுதியை ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2016ஆம் ஆண்டு மதுரை வடக்கு தாசில்தாராக இருந்த அன்பழகனையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக உள்ளார். இதனிடையே இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















