2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் தூய்மைப் பணிகள், கழிவறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 139 கோடி ரூபாய் செலவில் ‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
காமராஜர் சிறப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு அமைப்பை ஏற்படுத்த 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைத்து, கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி’ மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர்,
உயர் கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
















