அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களிடம் பேசி எவ்வித பயனும் இல்லை என்றும், அவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தலைமை அழைத்து பேச வேண்டும் என ஒன்றிய செயலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய இபிஎஸ், வளர்த்தெடுத்து, அடையாளம் தந்த கட்சியை விட்டுச் செல்பவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடைக்காது எனக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த பொதுத்தேர்தல் தோல்விக்கு திமுகவின் கூட்டணி பலமே காரணம் என்றும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிமுகவை வலுப்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இபிஎஸ் உறுதியளித்தார்.
















