விவசாய விளைபொருள்களில் உலகம் முழுவதும் பல்வேறு ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதே ரசாயனங்கள் மனித உடல்நலத்திற்கு ஆபத்தானவை என கூறி, ஐரோப்பா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் அவை இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
உலக அளவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், பயிர்களை பூச்சி மற்றும் களைகளில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு வகையான ரசாயன பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் அந்த ரசாயனங்கள் மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகளவில் தொடர்ந்து கவலை எழுந்துள்ளது.
குறிப்பாக Paraquat, Glyphosate மற்றும் 2,4-D போன்ற களைக்கொல்லி மருந்துகள் உலகின் பல நாடுகளில் விவசாயத்தில் முக்கியமாக களைகளை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு சில ஆண்டுகளுக்கு முன்பே Glyphosate-ஐ probable carcinogen என்ற சாத்தியமுள்ள புற்றுநோய் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. அதாவது நீண்டகால வெளிப்பாட்டில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் Paraquat போன்ற மிக அதிக விஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் பல வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த ரசாயனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதிக விளைச்சல், குறைந்த செலவு மற்றும் விவசாய தேவை காரணமாக இவை இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் இந்திய விவசாய ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக சில இந்திய ஏற்றுமதி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் அனுமதி சோதனையில் நிராகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எச்சரிக்கும் நிபுணர்கள், இந்த ரசாயனங்கள் உடனடி பாதிப்பை விட நீண்டகாலத்தில் மெதுவாக மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இவை உணவுப் பொருட்கள், நீர் மற்றும் மண் வழியாக மனித உடலுக்குள் நுழையும் அபாயம் உள்ளது எனவும் கூறுகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் விவசாய பணியில் நேரடியாக ஈடுபடும் மக்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த ரசாயனங்களுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என உலகளவில் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில ஆய்வுகள் Glyphosate மற்றும் Paraquat போன்ற ரசாயனங்கள் நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில வகை புற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இவற்றை சரியான அளவில் பயன்படுத்துபோது மனித உடலுக்கு ஆபத்தில்லை என வேறு சில சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. இதனால் உலகளவில் இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகவே நீடிக்கிறது.
இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், உணவு உற்பத்தி தேவைக்கும் மனித ஆரோக்கிய பாதுகாப்புக்கும் இடையே சரியான சமநிலை எங்கே இருக்கிறது என்பதுதான். உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டிய தேவை ஒரு பக்கம் உள்ளது. அதே நேரத்தில் மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
சமீப ஆண்டுகளில் சில நாடுகள் Paraquat போன்ற ரசாயனங்களை முழுமையாக தடை செய்துள்ளன. மேலும் Glyphosate மற்றும் 2,4-D போன்ற ரசாயனங்களுக்கும் பல நாடுகளில் தடை விதிக்க பரீசிலிக்கப்பட்டு நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விவசாயிகள் பெரும்பாலும் குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெற இந்த ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர்.
இதனால் ஒரு பக்கம் விவசாய பொருளாதாரம், மறுபக்கம் பொதுமக்களின் உடல்நலம் என்ற இரண்டு முக்கியமான பிரச்னைகள் நம்மிடையே நிற்கின்றன.
இன்றைய நிலையில் எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், நம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை? நாம் சாப்பிடுவது உணவா அல்லது மெதுவாக உடலை பாதிக்கும் ஆபத்தான ரசாயனங்களா?
இந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கவில்லை என்றாலும், இந்த விவாதம் உலக அளவில் மேலும் தீவிரமடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
















