சகோதரர் குடும்பத்தினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு, சொத்துப் பிரச்னை தொடர்பாக சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைப் பெற நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, வழக்கை ரத்து செய்யவும், ஆஜராவதில் விலக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, சமரசத்திற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி வழக்கை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பினார். மேலும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து, ஜூலை 13-ம் தேதி சம்பந்தப்பட்ட அனைவரும் சமரச மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
















