சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையின் சேவைகள் குறித்து சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் பல்வேறு வார்டுகள், சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை முதலமைச்சர் தனது கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள், நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது, எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனைக்கு நீண்டகால தொலைநோக்கு பார்வையுடன் ஒருங்கிணைந்த நவீன மருத்துவ வளாகத்தை உருவாக்கும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















