பள்ளி கல்வியில் சிறந்து விளக்கும் மாநிலங்களில், யூனியன் பிரதேசமான சண்டிகர் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், செயல்திறன் தரவரிசை குறியீடு பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வித்துறையின் உட்கட்டமைப்பு, கற்றல் தரம், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் 70 காரணிகளை ஆராய்ந்து பள்ளி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
அதன்படி, 2025-26 கல்வியாண்டுக்கான ‘செயல்திறன் தரவரிசை குறியீடு’ அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், சண்டிகர் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், கேரளா, டெல்லி, பஞ்சாப், டையூ டாமன், தாதர் நாகர் ஹவேலி ஆகியவை இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எந்தவொரு மாநிலமோ, யூனியன் பிரதேசமோ உச்சபட்ச தரங்களான ‘உத்தம்-1’ மற்றும் ‘உத்தம்-2’ தகுதியை பெறவில்லை என்றும், சண்டிகர் மட்டுமே ‘உத்தம்-3’ என்ற தரத்தை பெற்றுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மாவட்டங்களுக்கான தரவரிசையிலும், எந்தவொரு மாவட்டமும், உச்சபட்ச தரத்தை எட்டவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 462 மாவட்டங்கள் கல்வி தரத்தில் முன்பை விட முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதில், 50 மாவட்டங்கள் முந்தைய தர நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்வியில் சிறந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகம் செயல்திறன் தரவரிசை குறியீடு பட்டியலில் இடம் பெறவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















