மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் ஆகஸ்ட் மாதமே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில், 2 ஆயிரத்து 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கட்டுமான பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் புதிய வளாகத்தில் முழுமையாக தொடங்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்திலேயே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















