தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரு மாதம் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிறப்பு நடவடிக்கையின்போது போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மாவட்டங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் டிஐஜிக்கள் நேரடியாக கண்காணித்து காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும்,
ஒரு மாத கால நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாநில அளவிலான சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும்,
மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடவடிக்கை அறிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறப்பு நடவடிக்கையை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
















