டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கான 25 சதவீத ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.
இதன் மூலம் டாஸ்மாக் விற்பனையாளர்களின் ஊதியம், 15 ஆயிரத்து 530 ரூபாயில் இருந்து 19 ஆயிரத்து 413 ரூபாய் ஆகவும் டாஸ்மாக் துணை விற்பனையாளர்களின் ஊதியம் 14 ஆயிரத்து 340 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 925 ரூபாயாகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் ஊதியம் 17 ஆயிரத்து 850 ரூபாயில் இருந்து 22 ஆயிரத்து 313 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
டாஸ்மாக் ஊதிய உயர்வால் அரசுக்கு 110 கோடியே 74 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என கூறிய அமைச்சர் விக்னேஷ், MRP விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேடுகளை தடுக்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார் எனவும் விரைவில் இஎஸ்ஐ அட்டை வழங்கப்படும் எனவும் கூறினார்.
டாஸ்மாக் வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல எனவும் மதுபானங்களின் விலை உயராது எனவும் அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது தொடர்கதையாக உள்ளது என வேதனை தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், இனியும் கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் வரை நடவடிக்கை இருக்கும் எனவும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
















