இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் பிரபோவோ சுபியான்டோவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, நிலையான விவசாயம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் குறித்து இருவரும் கருத்து பகிர்ந்து கொண்டதாக கூறினார். இந்தியாவும் இந்தோனேசியாவும் இளைஞர் ஆற்றல் மிக்க நாடுகள் எனக்கூறிய பிரதமர் மோடி, இருநாட்டு இளைஞர்களுக்கு தொழில்நுட்பத்தில் இயல்பான திறமை உள்ளதாகவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் பெங்களூருவின் வளாகத்தை இந்தோனேசியாவில் நிறுவவுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடி, இது ஆசியான் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என கூறினார். மேலும், இந்தியா-இந்தோனேசியா இடையே பிரம்மோஸ் ஏவுகணைகள் அமைப்பு தொடர்பான ஒப்பந்தம், விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















