‘மேக் இன் இந்தியா’ மற்றும் சுயசார்பு இந்தியா திட்டங்களின் கீழ் நாட்டின் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மொத்த பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கு 42,000 கோடி ரூபாய் மதிப்பில் 24 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு….
கடந்த ஜனவரியில் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் தனியார் துறையின் பங்களிப்பை 50 சதவீதமாக அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.
நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம், பாரதத்தின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.
2014ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு வெறும் 46000 கோடியாக இருந்தது.அதுவே 2026-ல் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 33,000 கோடியாக அமைந்துள்ளது. இது மொத்த உற்பத்தியில் 25 சதவீதமாகும்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்துவந்தன. DRDO ஏவுகணை அமைப்புகளை வடிவமைக்கவும், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற BDL முதன்மை உற்பத்தி நிறுவனமாகவும் செயல்பட்டு வந்தன.
2014க்கு பிறகுதான் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் பாதுகாப்புத் துறையில் அதிகரிக்க தொடங்கியது.
இந்த மாற்றத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் விளைவாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி சுமார் 50,000 கோடியைத் தொடும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்துவந்தது உள்நாட்டுத் திறன்களை வளர்க்க உதவியது என்றாலும், உற்பத்தித் தடைகளையும் முக்கியமான ஆயுத அமைப்புகளைச் சேவையில் இணைப்பதில் தாமதத்தையும் ஏற்படுத்தியது.
இப்போது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியாவின் தன்னிறைவு மற்றும் பாதுகாப்புத் தயார்நிலை வலுப்படுத்தப்படுவதாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் எதிர்காலத்தை வேகமாக வடிவமைப்பதாகவும் கூறியுள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் இனி உதிரிபாகங்களை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் சிக்கலான ஏவுகணை துணை அமைப்புகளை உருவாக்குதல், மேம்பட்ட உந்துசக்திகளை (propellants) தயாரித்தல் மற்றும் முழுமையான ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கின்றன. ‘பிரலாய்’ (Pralay) குவாசி-பேலிஸ்டிக் (quasi-ballistic) ஏவுகணைத் திட்டமே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்தவும், இந்தியாவின் ஏவுகணை இருப்பை வேகமாக அதிகரிக்கவும் தனியார் நிறுவனங்களில் உற்பத்திப் பாதைகள் (production lines) அமைக்கப்பட்டுள்ளன.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகத்தை 2,500 கோடி மதிப்பில் மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் Adani Defence & Aerospace நிறுவனம், உருவாக்கி வருகிறது.
மூலப்பொருட்கள் மற்றும் கூட்டு உந்துசக்திகள் (composite propellants) முதல் இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பு வரையிலான முழு ஏவுகணை உற்பத்திச் சுழற்சியையும் ஆதரிக்கும் வகையில் இந்த உற்பத்தி வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் (Akash) மற்றும் பினாகா (Pinaka) போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு மேம்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், மிஷன் கணினிகள் மற்றும் ஏவுதளங்களை (launcher platforms) உருவாக்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தி வருகிறது.
அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மற்றும் பிரம்மோஸ், பிருத்வி ஏவுகணை அமைப்புகளுக்கான பாகங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான சில திட்டங்களுக்கு லார்சன் & டூப்ரோ நிறுவனம், தனது கனரகப் பொறியியல் திறனை வழங்குகிறது.
உலோகவியல் மற்றும் துல்லியமான வார்ப்பில் தனது திறனைப் பயன்படுத்தி, கடுமையான செயல்பாட்டு நிலைமைகளைத் தாங்கக்கூடிய ராக்கெட் மோட்டார் உறைகளையும், ஏவுகணைக் கட்டமைப்புகளையும் பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.
நவீன ஏவுகணை அமைப்புகளுக்கு அத்தியாவசியமான திட உந்து எரிபொருட்கள், உயர் ஆற்றல் வெடிபொருட்கள் மற்றும் போர்க்குண்டு ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பங்களின் முக்கிய விநியோகஸ்தராக சோலார் டிஃபென்ஸ் நிறுவனம் வளர்ந்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் (MSMEs) கொண்ட ஒரு வளர்ந்து வரும்பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரா மைக்ரோவேவ் ப்ராடக்ட்ஸ், டேட்டா பேட்டர்ன்ஸ் மற்றும் விஇஎம் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள், முக்கியமான ரேடார் அமைப்புகள், இராணுவ வானூர்தி மின்னணுவியல், உணர்விகள் மற்றும் இயக்கத் தொழில்நுட்பங்களை வழங்கி, இந்தியாவின் விரிவடைந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி நெட்வொர்க்கின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
ஒரே ஒரு உற்பத்தியாளரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் உற்பத்தித் தடைகளை நீக்குகிறது; பல இணைப்புத் தொடர்களை ஒரே நேரத்தில் இயக்க அனுமதிக்கிறது மற்றும் ஏவுகணை அமைப்புகளை விரைவாக அறிமுகப்படுத்த உதவுகிறது. புவியியல் ரீதியாகப் பரவலாக்கப்பட்ட உற்பத்தி, விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்துகிறது மற்றும் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி வசதிகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்கிறது.
DRDO-வின் அறிவியல் திறத்தையும் தனியார் தொழிற்துறையின் செயலாக்கத் திறன்களையும் ஒன்றிணைப்பது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்கிறது.
இதனால் மேம்பட்ட பாதுகாப்பு உற்பத்திக்கான வளர்ந்து வரும் உலகளாவிய மையமாக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது.
















