அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான 4&5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும், இடைநிலை மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும், 1 முதல் 3 ஆம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு “ஆசிரியர் கையேடு”களும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோடைக்காலம் முடிந்து சரியாக பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நீங்கள், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருக்கின்றனரா, பாடப்புத்தகங்கள் முழுவதுமாக பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெற்றனவா, பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதைத் தானே முதலில் ஆய்வு செய்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்? என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், நீங்களோ அரசுப் பள்ளி மாணவிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அதிகாரத் தொனியில் குத்திக் காட்டிய அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்களின் So called “ஆய்வு” சரி தான் என்று கூறி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகச் சிறந்த கல்வித்துறை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களே! அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள் என அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















