மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திடீரென திரண்டு ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதால் வரலாறு காணாத எல்லை குழப்பமும், பதற்றமும் உருவாகியுள்ளது. சட்டவிரோத ஊடுருவல்கள் திடீரென அதிகரித்ததற்கு என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய யூனியனின் ஒரே தரை எல்லையாக விளங்கும் ஸ்பெயினின் (Ceuta) சியூட்டா மற்றும் மெலில்லா வழியாக குடியேறும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பல நாட்களாக அதிகரித்து வருகிறது.
(Ceuta) சியூட்டா மற்றும் மெலில்லா ஆகியவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் பிரதான நிலப்பகுதியில் அமைந்துள்ள ஒரே ஐரோப்பியப் பிரதேசங்கள் ஆகும்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய யூனியனின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக உள்ளன.
மொராக்கோ நாட்டின் தரை எல்லையையும், மத்திய தரைக்கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் அமைந்துள்ள இந்தப் பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மொராக்கோ அரசு நீண்ட ஆண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் ஸ்பெயின், மொராக்கோவின் அரசியல் மற்றும் சட்டப்பூர்வமான கோரிக்கையை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.
ஐரோப்பா கண்டத்துக்குள் நுழையும் ஒரே நுழைவு வாயிலாக அமைந்துள்ள இந்தப் பகுதிகள் வறுமை மற்றும் உள்நாட்டு மோதல்களில் இருந்து தப்பிக்க விரும்பும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் முக்கிய மையமாகத் திகழ்கிறது.
கடந்த வியாழக்கிழமை மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடலில் நீந்தி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்பையும் கடற்படைப் பாதுகாப்பையும் மீறி நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் நகருக்குள் நுழைந்து வருவதால் அங்கு “முழு அவசரநிலை” பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மொராக்கோவின் எல்லை நகரமான எஃப்னிடெக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தராஜல் (Tarajal) கடற்கரைப் பகுதி வழியாகச் Ceuta சியூட்டா எல்லைக்குள் நுழைந்து வருகின்றனர்.
எல்லையைக் குறிக்கும் படகுத்துறையைச் சுற்றி நீந்துவதற்காக, கான்கிரீட் கரைகள் வழியாகக் கடலுக்குள் ஆயிரக்கணக்கானோர் சறுக்கி இறங்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
ஸ்பெயின் கடற்கரைகள் ரப்பர் வளையங்களாலும், துடுப்புகளாலும் நிரம்பி வழிகின்றன. சில புலம்பெயர்ந்தோர் தங்கள் வருகையைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், பத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
சரியாக எத்தனை பேர் எல்லையைக் கடந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் சுமார் 2,000 முதல் 3,000 பேர் வரை Ceuta சியூட்டாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தான் 2021ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு சில நாட்களுக்குள் சுமார் 8,000 பேர் Ceuta சியூட்டாவுக்குள் நுழைந்தனர்.
குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் நகருக்குள் குவிந்ததால் நகரில் உள்ள அகதிகள் முகாம்கள் மற்றும் தற்காலிகத் தங்குமிடங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அடிப்படை வசதிகளைக் கூட வழங்க முடியாமல் உள்ளூர் நிர்வாகம் திணறி வருகிறது.
மொராக்கோ பாதுகாப்புப் படையினரும், ஸ்பெயின் கடலோரக் காவல் படையினரும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அலை அலையாக வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதால், நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாக அப்பகுதியின் தலைவர் ஹுவான் இயேசுஸ் விவாஸ் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்பையும் கடற்படைப் பாதுகாப்பையும் மீறி நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் நகருக்குள் நுழைந்து வருகின்றனர்.
இராணுவத்தையும் வான் மற்றும் கடற்படையையும் அனுப்பியுள்ள ஸ்பெயின் அரசு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த மொராக்கோவுடன் இணைந்து புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே கண்காணிப்பை அதிகரித்தல், தடுப்பு அரண்களை அமைத்தல் மொராக்கோ அரசுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் என எல்லைப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பை ஸ்பெயின் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த ஊடுருவல் அரசியல் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் வருகையை ஊக்குவிப்பதற்காக இந்த மாதிரியான எல்லைத் தாண்டலை மனிதக் கடத்தல் நெட்வொர்க் பயன்படுத்திக் கொள்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
எல்லைப் பகுதிகள் முழுமையான குழப்பத்தில் உள்ளதாகவும் எல்லைக் கட்டுப்பாடு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும் ஸ்பெயின் குடிமைக் காவல் சங்கத்தின் தலைவர் ரஷீத் ஸ்பிஹி, தெரிவித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார்.
Ceuta சியூட்டாவிலிருந்து வந்த படங்கள் “வியக்கத்தக்கவை” என்றும், “கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பாவின் எல்லைகளின் பாதுகாப்பிற்கு ஒரு உறுதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
ஷெங்கன் பகுதி என்பது, தங்களின் பொது எல்லைகளில் உள்ள கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்கிய 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு திறந்த எல்லை அமைப்பாகும் என்பதால், இந்த ஊடுருவல்களை தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஸ்பெயினுடனான திறந்த எல்லை ஷெங்கன் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
















