நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக நிதியமைச்சர் மரியவில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் தரப்பில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும்,
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் மரியவில்சன் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என கேள்வி எழுப்பினார்.
பதவிக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரானவர், தற்போது ஏன் ஆஜராக முடியாது எனவும் வினவினர். மேலும், எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் ஆஜராவார் என்பதை பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
















