பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை மின்சார வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்திய நிலையில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பிரதமர் மோடி பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன என்றாலும், அவற்றில் சுமார் 5 சதவீதம் மட்டுமே அரசு பேருந்துகளாகும்.
நாட்டின் சிறிய நகரங்களுக்கும் மின்சாரப் பேருந்து நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதன் மூலம், சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்குள் இந்தியா எரிசக்தி தன்னிறைவு பெற்ற நாடாகும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மின்சாரப் பேருந்துகள், மூன்று சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக இருசக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
ஃபேம் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள், 10 லட்சம் இருசக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.
மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களின் முன்கூட்டிய கொள்முதல் விலையைக் குறைப்பதன் வடிவத்தில் e-2W மற்றும் e-3W வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டைப் பெருமளவில் அதிகரிப்பதற்கான அடித்தளத்தை இந்தியா அமைத்துள்ளது.
பிரதம மந்திரி-மின்சாரப் பேருந்து சேவைத் திட்டத்தின் கீழ் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒன்பது முக்கிய நகரங்களில் 14,000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன .
இப்போது 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 20,000 மின்சாரப் பேருந்துகள் கொள்முதலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
இந்தச் சூழலில் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85க்கும் மேல் இறக்குமதி செய்துவரும் இந்தியாவிலும் ஈரான் போரின் தாக்கம் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, தனது சிறப்பு பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்துள்ளார்.
தொடர்ந்து மாநில முதல்வர்கள், ஆளுனர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் பிரதமர் மோடியைப் பின்பற்றி தங்கள் சிறப்பு கான்வாயில் வாகன என்ணிக்கையைக் குறைத்துள்ளனர்.
எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும், நகர்ப்புறக் காற்று மாசுபாட்டைக் கையாளவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அடுத்த பத்தாண்டுகளில் தனியார் துறையில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் டீசல் பயன்பாட்டில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள தனியார் வர்த்தக வாகனங்கள், நகரங்களுக்கு இடையேயான பேருந்து நிறுவனங்களுக்கான திட்டம் இதுவாகும்.
ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் முழுவதும் அதற்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு யோசித்துவருவதாக கூறப் படுகிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கான மின்சார வர்த்தக வாகனங்கள் வாங்குவதற்கு நிதியளிக்க ஒரு பகுதி கடன் உத்தரவாத வழிமுறையையும் அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
















