பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தலைநகர் முசாஃபராபாத்தை நோக்கிய இந்த நீண்ட பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் அணி திரண்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, கோதுமை தட்டுப்பாடு போன்றவற்றுக்கு எதிராக நீண்டகாலமாகவே நடந்து வந்த மக்கள் போராட்டம், அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் சமத்துவம் என்ற கோரிக்கைகளுடன் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகள், துப்பாக்கிச் சூடுகள், அரசின் கட்டாய கடையடைப்புகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்தன.
சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிர்த்த தியாகம் செய்துள்ள நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி சுய அரசியல் ஆதாயம் தேடும் பாகிஸ்தான் அரசின் மீது பொதுமக்களின் அதிருப்தி ஆக்ரோஷமாக மாறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அவாமி நடவடிக்கை குழுவினர், பாகிஸ்தான் அரசுக்கு கடந்த வியாழக்கிழமை இறுதி எச்சரிக்கையாக 48 மணி நேர கெடு விதித்திருந்தனர். இந்தக் கெடு காலாவதி ஆகும் நாளில் ஜூலை 15ம் தேதி முசாஃபராபாத்தை நோக்கிய நீண்ட பேரணி நடக்கும் என்றும், அப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், சாலை மறியல்கள் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தபோதிலும் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் இந்தப் பயங்கரவாதத்துக்குப் பின்னால் பாகிஸ்தான் இராணுவமே உள்ளது என்றும், சர்வதேச ஊடகங்களே எங்களுக்கு கவரேஜ் கொடுங்கள் என்ற வாசகங்கள் பொறித்த வெள்ளை நிறக் கொடிகளை ஏந்திய படி , பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
பொதுமக்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் அவாமி நடவடிக்கை குழுவினர், இது குறித்து முசாஃபராபாத் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்த படுகொலைக்குக் பொறுப்பு என்று தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் இளைஞர்களைக் கொன்றது பாகிஸ்தான் படைகள்தான் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் இளம் சகோதரர்களின் உடல்களை ஏந்திச் செல்கிறோம்… மறுபுறம் ஆட்சியாளர்கள் இதைப் புறக்கணித்து, இந்த படுகொலையை ஒரு தேர்தல் கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் ரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்ககூடாது என ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
முசாஃபராபாத் நகரைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன;
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ‘கூட்டு அவாமி செயல் குழு’வின் (JAAC) உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக நம்பகமான உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.
















