பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை, பணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அந்நாட்டு மின் விநியோக நிறுவனங்களை வாங்கும் சீன நிறுவனம் பின்வாங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இழப்பில் இயங்கும் தனது மின் விநியோக நிறுவனங்களைச் சீரமைக்க வெளிநாட்டு முதலீட்டை பாகிஸ்தான் எதிர்பார்த்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக Faisalabad Electric Supply Company என்ற பைசலாபாத் மின் விநியோக நிறுவனத்தின் 51 சதவீதம் முதல் 100 சதவீதப் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏல செயல்முறைகளை பாகிஸ்தான் தனியார்மயமாக்கல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
FESCO-வின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்துக்காக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த 12 நிறுவனங்களில் அடிப்படை பரிசீலனைக்குப் பிறகு 10 நிறுவனங்கள் அடுத்த கட்ட ஏல நடவடிக்கைக்குத் தகுதி பெற்றுள்ளன. 2 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏலத்துக்கு விண்ணப்பித்திருந்த ஒரே சீன நிறுவனமான Jiang Xi Electric Power Construction என்ற நிறுவனம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான FESCO நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் ஏலப் போட்டியில் பங்கேற்க முறையாகத் தகுதி பெறவில்லை.
பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில மொழியில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், சீனாவின் மாண்டரின் Mandarin மொழியில் சமர்ப்பித்த காரணத்தால் சீன நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளது.
ஏலத்துக்கான போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்ட சீன நிறுவனமான Jiang Xi Electric Power Construction என்பது PowerChina குழுமத்தின் துணை நிறுவனமாகும். 1987 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் மின்சக்தி, உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளில் சீனாவின் PowerChina நிறுவனம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்து, பல்வேறு பெரிய திட்டங்களை PowerChina வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான தர்பேலாவின் 4 மற்றும் 5-வது விரிவாக்கத் திட்டம் , சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாகிஸ்தானின் முதல் முக்கிய நீரோட்ட நீர்மின் நிலையமான Ghazi-Barotha Hydropower Project திட்டம், பாகிஸ்தானில் கட்டப்பட்ட முதல் ரோலர்-காம்பாக்டட் கான்கிரீட் பல்நோக்கு அணைத் திட்டமான Gomal Zam Dam திட்டம், பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய ரோலர்-காம்பாக்டட் கான்கிரீட் அணையான Diamer Basha Dam திட்டம் என பல முக்கிய திட்டங்களை PowerChina நிறுவனமே செய்து வருகிறது.
இந்நிலையில் FESCO-வின் ஏலத்தில் இருந்து சீனா பின்வாங்கி இருப்பது, இருநாடுகளின் பொருளாதார உறவவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் முதலீடு செய்வது பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்ற சீன முதலீட்டாளர்களின் கருத்தையே FESCO ஏலம் சுட்டிக் காட்டியுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஏற்கனவே கடினமான தனியார்மயமாக்கல் முயற்சியை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்று கூறப் படுகிறது.
















