சென்னை ராமாபுரம் அருகே விநாயகர் ஊர்வலம் தெருவுக்குள் வராதது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ராஜ கணபதி கோயிலில் இருந்து இரவு 11 மணியளவில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டுள்ளது. 13-வது தெருவில் பாதி வரை சென்ற விநாயகர் ஊர்வலம், பின்னர் மற்றொரு தெருவுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த தெருவை சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், நள்ளிரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சீனிவாசன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, அவரை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















