தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 24 இரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடலை வாட்டி வதைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில், கடும் பனிப்பொழிவு நிலவுவதால், 24 இரயில்கள் மிக காலதாமதத்துடன் இன்று இயக்கப்படுகின்றன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வர கூடிய இரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 விரைவு இரயில்கள், ஹைதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், செகந்திராபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லி செல்ல கூடிய விரைவு இரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.