மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா வந்தே மாதரம், நாட்டுப்பண், தமிழ்தாய் வாழ்த்து பாடல்களுடன் தொடங்கி நடைபெற்றது. பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதுசூதன குரூப், துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பட்டம் பெற்ற 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடப்பாண்டு பட்டமளிப்பு விழாவில், தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், நிலக்கோட்டை நீதிபதி திரிவேணி, மேலாண்மையியல் பிரிவில் மும்பை காவல் துணை கமிஷனர் ராதா சுதா ஆகியோர் முனைவர் பட்டம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 3 பேரும் விழாவில் பங்கேற்காததால் ஆளுநரிடம் நேரடியாக பட்டம் பெற முடியாமல்போனது. இதனிடையே, பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
















