கட்டுமானப் பொருட்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரஃப் ஸ்டோன் , ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மட்டும் இந்தத் தடை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத கனிமவளக் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு தற்காலிகத் தடையை அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
















