இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இந்தியா – சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளிவராத புத்தகம் குறித்த கட்டுரையை வைத்துக் கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல்காந்தி மேற்கோள் காட்டும் புத்தகத்தை மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதனை தாம் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்…
இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் விதிகளை மதித்து பேச வேண்டும் எனவும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விதியை பின்பற்றாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்? என ராகுல்காந்திக்கு கேள்வி எழுப்பினார். குடியரசு தலைவர் உரை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசி வருகிறீர்கள் எனவும் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப அவையை நடத்த முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஆதாரமற்ற தகவல்களைப் பேசுவது ஆபத்தானது என தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்போது, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல்காந்தி முயற்சிப்பதாகவம் அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து சீனா, எல்லையின் பெயர், ராணுவ தளபதியின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடாமல் ராகுல்காந்தி பேசிய நிலையில் அதற்கு சபாநாயகர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது…
















