கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.
தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பிறகு, மற்றொரு வாகனத்திற்காக கேனில் பெட்ரோல் பிடித்துள்ளார். அப்போது பணியில் இருந்த ஊழியர், பாதியிலேயே பெட்ரோல் போடுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஊழியர், திடீரென வாடிக்கையாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
ஊழியரின் இந்த செயலைக் கண்ட அங்கிருந்த சக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
















