இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சத்தமே இல்லாமல் மாற்றியிருக்கிறது வெள்ளை மாளிகை. அதற்கான காரணம் என்ன?
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை சில முக்கியமான மாற்றங்களை சத்தமே இல்லாமல் ரகசியமாக செய்திருப்பது தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அசல் அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளதாக அதாவது Committed என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட அறிக்கையில், இந்தியா வாங்க உத்தேசித்துள்ளது, அதாவது Intends என அந்த வார்த்தை மென்மையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா உடனான ஒப்பந்தம் கட்டாய கொள்முதல் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து விவசாயம் அதாவது Agricultural என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது.
மற்றொரு திருத்தம் வரி குறைப்பு பற்றியது. அதன்படி முந்தைய அறிக்கையில் அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், தானியங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் என்று கூறியது. தற்போது வெள்ளை மாளிகை திருத்தி வெளியிட்ட அறிக்கையில், சில பருப்பு வகைகள் என்பது மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
முந்தைய அறிக்கையில், இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று நேரடியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட அறிக்கையில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா மீதான 18 சதவீத வரி குறைப்பு நடவடிக்கை தொடருகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே நீக்கிய நிலையில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தமானது அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எறு எதிர்பார்ப்படுகிறது.
















