ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். விழா மேடையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏலக்காய் மாலையும், வெள்ளி முருகர் சிலையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் நடைபெற்ற ஊழல்களை சிபிஐ விசாரித்து வருவதாக கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அமித்ஷா, என்டிஏ கூட்டணி அரசு புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து தாக்குதல் தொடுத்ததாகவும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா பிரதமர் மோடி ஐரோப்பிய நாடு, அமெரிக்காவுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும் தீங்கு ஏற்படாது என தெரிவித்தார். ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
















