கோவை மாவட்டம் காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரமடை அருகே வேலாயுதபுரம் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், இந்துக்கள் அங்காளம்மன் கோயிலுக்கு செல்ல பயன்படுத்தி வந்த சாலையை, இஸ்லாமியர்கள் வக்பு சொத்து எனக்கூறி அந்த பாதையை தடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு எந்தவித செயல்களிலும் ஈடுபட கூடாதென தடை உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்தவும், கஞ்சி காய்ச்சவும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் அனுமதி அளித்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.
காரமடை வருவாய் உட்கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்துக்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி வழங்கினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.
















