தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பின், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன என்றும்,
அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகள் உருவாக்கப்படுகின்றன என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விலைகளில் ஏற்படும் கடும் உயர்வில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க, மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற போலியான தகவல்களால், மக்கள் தவறாக வழி நடத்தப்பட வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி நீடிக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















