சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீரென ரசாயனப் புகை பரவியதால் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். தலைமைச் செயலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 11.30 மணியளவில் திடீர் புகைமூட்டம் நிலவியது. நச்சுவாயு கலந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் முகத்தை துணியால் மூடியபடியும், கார் கண்ணாடிகளை திறக்காமலும் அப்பகுதியை கடந்து சென்றனர். இதற்கிடையே, துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சல்பர் குவியலில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதே புகைமூட்டம் ஏற்பட காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து எதுவும் இல்லை என்றும், வெப்பத்தின் தாக்கத்தால் சல்பர் குவியலில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதாகவும் சென்னை துறைமுகம் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















