இந்திய திரையிசையில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.ஜானகி பாடியுள்ளார். தமிழில் இரண்டு, தெலங்கு மற்றும் மலையாளம் என, நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மருத்துவமனையில் எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் காலமானதாக, அவரது பேத்தி தகவல் தெரிவித்தார். எஸ்.ஜானகியின் மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகியின் ஆத்மா சாந்தி அடையட்டும் என, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜானகியின் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? என நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இறக்கி வைக்க முடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
















