6 நாட்கள் இறுதி சடங்குகள் முடிந்து, முன்னாள் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போரில் முதல் நாளிலேயே ஈரானில் கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை அதிகாரமாக ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து அடுத்த உச்ச தலைவராக கொமேனியின் மகன் மொஜ்தபா கொமேனி நியமிக்கப்பட்டார். இன்று வரை பொதுவெளியில் தோன்றாத புதிய உச்ச தலைவர் தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும் கடந்த 125 நாட்களுக்கும் மேலாக புகைந்து கொண்டிருந்த ஈரானின் தலைமையில் நிலவும் பிளவுகள் கொமேனியின் இறுதிச்சடங்கில் வெளிப்படையாக தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், நீதித்துறைத் தலைவர் கோலம்ஹொசைன் மொஹ்சேனி மற்றும் ஐ.ஆர்.ஜி.சி-யின் மூத்த தளபதிகள் உள்ளிட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஒன்றாக இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
ஆனாலும் தீவிர இஸ்லாமிய கொள்கை உடையவர்கள், சீர்திருத்தவாதிகள், தற்போதைய ஆட்சிக்கு எதிரானவர்கள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு தீவிரப் போட்டி மறைந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதலில் ஈரானின் உச்சத் தலைவர் இனி கேள்விக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்ற நிலை உருவாகியுள்ளது. உச்ச தலைவருக்கு மட்டுமே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், அவர் முடிவெடுப்பவர்களில் ஒருவர் மட்டுமே என்றும், மற்றவர்களின் கருத்துக்களைப் போலவே அவருடைய கருத்துக்களும் விவாதத்திற்கு உட்பட்டவை என்றும் துணை அதிபர் முகமது-ஜாஃபர் கயெம்பனா தெரிவித்திருந்தார்.
இரண்டாவதாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாகவே அரசு தொலைக்காட்சி செயல்படுகிறது.
கடந்த மாத இறுதியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் நேரலையில் விளக்கிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதே இதற்கு சான்றாகும்.மூன்றாவதாக ஈரானின் இஸ்லாமிய அரசுக்கு மக்களிடையே இருந்த பெரும் செல்வாக்கு குறைந்து வருகிறது
சீர்திருத்தவாத இயக்கத்தின் முக்கியத் தலைவரான அதிபர் பெசெஷ்கியன் பழமைவாத இஸ்லாமிய முகாமில் உள்ள சீர்திருத்தவாதிகளின் ஆதரவைப் பெறும் அதே வேளையில், ஈரானின் தீவிரப் போக்குடைய அடையாளத்தை மெல்ல மெல்லத் தளர்த்தி வருகிறார்.
இதற்கிடையே அரசியல் ரீதியாக, அமெரிக்காவுடனான எந்தவொரு சமரசத்தையும் உறுதியாக எதிர்க்கும் தீவிர இஸ்லாமிய கொள்கை உடையவர்களை விட அதிபர் பெசெஷ்கியன், காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் தலைமையிலான சீர்திருத்தவாத தலைவர்களுக்கே உச்சத் தலைவர் மொஜ்தபா அலி கொமேனி ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் பெஷேஷ்கியன் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு உச்ச தலைவர் மொஜ்தபாவின் ஒப்புதல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஐ.ஆர்.ஜி.சி-க்குள் இருக்கும் ஒரு பிரிவு, ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதற்கே செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் ஐ.ஆர்.ஜி.சியின் தீவிரவாத பிரிவா? அதிபர் பெஷேஷ்கியன், காலிபாஃப் மற்றும் அராக்சி தலைமையிலான சீர்திருத்தவாத பிரிவா? எது அதிக வலிமை பெறுகிறது என்பதைப் பொறுத்தே அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஈரானின் எதிர்காலமே தீர்மானிக்கப்படும்.
















