சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள், மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து நீடிக்கும் மின்தடையால் குடிநீர் மோட்டார்கள் இயங்காமல், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபோன்களை சார்ஜ் செய்ய முடியாமலும், மின்சாதனங்கள் செயல்படாமலும் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















