ஸ்ரீ வைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போராட்ட களத்தில் குதித்தது பேசுபொருளாகியுள்ளது.
50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏரல் வாரச் சந்தை, தவெக எம்எல்ஏ சரவணன் உத்தரவால் மூடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, வாரச்சந்தை எந்தவித பிரச்னையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என ஏரல் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் திமுக சார்பில் ஏரல் பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர், தூத்துக்குடி மாவட்ட அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
அந்த பேனரில் அதிகாரிகளிடம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்திய அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், சண்முகநாதனுக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களில் பயணித்த இருவர், தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக ஓரணியில் இணைந்ததாக தூத்துக்குடி மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
















