தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு ஏன்? என்பது குறித்து சேலத்தில் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
தமிழகம் முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தனியார் பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. பயண தூரத்தின் அடிப்படையில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அரசின் அனுமதியின்றி கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கட்டண உயர்வுக்கான விளக்கத்தை சேலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகள் ஏறும் படிக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் உரிமையாளர்கள் ஒட்டியுள்ளனர். அதில், கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாததால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை குறிப்பிட்டுள்ளனர்.
டீசல் விலை உயர்வு, புதிய பேருந்தின் கொள்முதல் விலை, இன்சூரன்ஸ் தொகை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மகளிர் இலவச பயண திட்டத்தால் தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது எனவும் உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
















