பாகிஸ்தானின் அரசு ராணுவம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். பலுசிஸ்தான் பாதுகாப்புக்காக பல பில்லியன்கள் செலவழித்தும் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள், நாட்டின் மீதே நம்பிக்கை இழந்துவிட்டதாக புலம்பி இருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பலுசிஸ்தான் விவகாரத்தில் அரசும் முக்கிய அரசியல் கட்சிகளும் திறமையற்று நெருக்கடியைத் தீர்க்கும் திறனற்று உள்ளன என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பலுசிஸ்தானில் மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழல், கட்டாயமாக ஆட்கள் காணாமல் போகும் பிரச்சினை ஆகியவை பற்றி விவாதிப்பதற்காக, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கே.பி. ஹவுஸில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் எதிர்க்கட்சிகளின் அனைத்துத் தரப்புத் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஒரு மாநாட்டை நடத்தியுள்ளன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக BLA உடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், பலுசிஸ்தானில் காணாமல் போனவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தானின் அனைத்து அமைப்புகள் மீதும் தமக்கு முழுமையான ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என பலுசிஸ்தான் நேஷனல் பார்ட்டி-மெங்கல் கட்சியின் தலைவரான அக்தர் ஜான் மெங்கல் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலுசிஸ்தான் விவகாரத்தை இனி பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் அல்லது நீதித்துறை அமைப்புகள் மூலம் தீர்க்க முடியாது என்று கூறிய மெங்கல், அந்த அமைப்புகள் முற்றிலும் இயலாமையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பலுசிஸ்தானில் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், சட்டம்-ஒழுங்குச் சூழல் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டிய மெங்கல் அப்பகுதியில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
அரசு வளாகங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் இருக்கும் அதே வேளையில், குவெட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
“கூட்டுக்குடும்ப வீடு” என்ற உவமையைப் பயன்படுத்திய மெங்கல், சமமான பங்குதாரர்கள் என்று கூறப்பட்ட போதிலும், பாகிஸ்தானின் அரசியல் கட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக பலூச் மக்கள் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு ஏற்பாடு தோல்வியடைந்துவிட்டது என்று விமர்சித்த மெங்கல் பலூச் மக்களுக்கான உரிமையை வழங்கும் வகையில் ஒரு “புதிய சமூக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக பஷ்டூன்களும், பலூச் மக்களும் வரலாற்று ரீதியான தங்களின் சுயாட்சியைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர் என்றும், அந்தக் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்றும் பஷ்டூன்க்வா மில்லி அவாமி கட்சியின் (PKMAP) தலைவர் மஹ்மூத் கான் அச்சாசாய் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முழுவதும் உள்ள பஷ்டூன்கள், தங்களின் மொழி மற்றும் தோற்றத்தின் காரணமாக, இனப்பாகுபாட்டிற்கும் துன்புறுத்தலுக்கும் அதிகளவில் உள்ளாவதாக குற்றம் சாட்டிய அச்சாசாய், தாடியும் தலைப்பாகையும் சந்தேகத்தின் அடையாளங்களாக மாறிவிட்டதாகவும், ஆப்கானிஸ்தானிலும் பஷ்தூ மொழி பேசப்படுவதால், அம்மொழி பேசுபவர்கள் அடிக்கடி விசாரிக்கப்படுவதாகவும், சில சமயங்களில் வெளிநாட்டினராக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அநீதி வெறுப்பை வளர்க்கிறது என்று கூறியதுடன் தொடர்ச்சியான இனப்பாகுபாடும் அடக்குமுறை கொள்கைகளும் இறுதியில் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அந்நியர் என்ற வெறுப்பை ஆழப்படுத்தி, ஸ்திரத்தன்மையின்மைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தானில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அரசியல் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும், கட்டாயமாகக் காணாமல் போதல்களுக்குத் தீர்வு காணவும், வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும், நீடித்த அரசியல் தீர்வுக்கான நிலைமைகளை உருவாக்கவும் பாகிஸ்தான் அரசை எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















