தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ்’ (UDISE) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய கல்வித்துறை, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான ‘யூடிஸ் அமைப்பின் 2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான புதிய புள்ளிவிவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் தமிழகப் பள்ளிகளின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த பல்வேறு முக்கிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது என்றும், அதாவது, இப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பயிலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே இல்லாத இந்த 60 பள்ளிகளில், 40 பள்ளிகளில் இன்னும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.
















