ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான ஆஸ்திரேலியன்சூப்பர், இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (NIIF) மேலும் 32 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தோனேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு,ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரவேற்று, முக்கியத் துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மெல்போர்ன் நகரில் அந்நாட்டு வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து, வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆஸ்திரேலிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்கள் தற்போது நான்கு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன என்றும், இந்தியாவில் ஓய்வூதிய சேமிப்புகள் ஒரு புனிதமான நம்பிக்கையாகக் கருதப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான, நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்தியா, ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்களுக்கு வழங்குகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்களின் நம்பிக்கையும் மூலதனமும் வளருவதை உறுதி செய்வதே நாட்டின் முயற்சியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான இந்நிறுவனத்தின் புதிய இந்திய முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான ஆஸ்திரேலியன் சூப்பர், இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (NIIF) மேலும் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உறுதியளித்த 240 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீட்டிற்கு மேலதிகமாக இந்த முதலீடாக இது அமையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டு அளவை 3.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்த்தியுள்ளது.
போக்குவரத்து, எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பிற முக்கிய சொத்துக்கள் உள்ளிட்ட துறைகளில் நீண்ட கால உலகளாவிய நிறுவன மூலதனத்தை ஈர்ப்பதற்காக, தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் 2015-ல் மத்திய அரசால் உருவாக்கப் பட்டது.
லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய ஓய்வூதிய சேமிப்பாளர்களின் சார்பாக சுமார் 410 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலியன் சூப்பர், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமாகும்.
இந்த முதலீடு நாட்டின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பாதையின் மீதான உலகளாவிய நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
AustralianSuper-இன் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் அறிவித்த 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீட்டை இந்தியா வரவேற்பதாகவும் நாட்டின் துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் மகத்தான வாய்ப்புகளையும் இந்த முதலீடு பிரதிபலிப்பதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















