5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்கு நீதிமன்றத்தால் ஏற்று கொள்ளப்பட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடும் வரை, அதனை முறையான நிலுவை வழக்காக கருத முடியாது எனவும். அதனால் தற்காலிக காலி இடங்களை நிரப்புவதற்கு எந்தவொரு சட்ட தடையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுவில் குறிப்பிட்டுள்ள தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரர், இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை எனவும், இடைத்தேர்தல் நடத்துவதா?, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் முன்பு இடைத்தேர்தல் நடந்தால் அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு 2 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு என்ற அரசியல் சாசன பிரச்னை எழும் என குறிப்பிட்டனர்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என்ற வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பினர்.அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
















