காஞ்சிபுரத்தில் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள, சுமார் 600 ஆண்டுகள் பழமையான உதாசின் பாவாஜி மடத்தில் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத் தொடக்க விழா நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு, விரதத்தைத் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
முன்னதாக, சங்கராசாரியர் சுவாமிகளுக்கு பாவாஜி மடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மடத்தின் பீடாதிபதி அனுபவானந்தாவுக்கு ஆதிசங்கரர் சிலையைப் பரிசாக வழங்கினார்.
விழாவில், காஞ்சிபுரம் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்தும், சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவம் குறித்தும் வடமாநில சாதுக்களுக்கு சங்கராசாரியர் விளக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, உதாசின் பாவாஜி மடத்தின் வடக்கு மாகாண பீடாதிபதியாக சத்தியமுனிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாநில மடங்களின் பீடாதிபதிகள், சங்கர மடத்தின் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
















