ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி 2025-ல் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆவணங்களுடன் ஆஜராகுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக பேசிய நீதிபதி, ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார்.
தங்களை தொட முடியாது என அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்; குற்றம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன எனவும், அடுத்த தேர்தலும் முடிந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்..
















