நியூசிலாந்து-இந்தியா இடையேயான தடையற்ற ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல் கல் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவை வெறும் சந்தையாக மட்டும் பார்க்காமல் வளர்ச்சிக்கான ஒரு உந்துதளமாகப் பார்க்குமாறு உலகளாவிய வணிகத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்று பெருமையைப் பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய ‘ஹகா’ நடனத்துடன், சிறப்பான வரவேற்பு வழங்கப் பட்டது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியாவுக்கு வந்தபோது தொடங்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெறும் 9 மாதங்களில் கையெழுத்தாகியுள்ளதை பாராட்டிய பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே சந்தை அணுகல், முதலீடு, தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் திறமையான பணியாளர்களின் பரிமாற்றம் ஆகியவற்றிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் நிவாரணம், சுற்றுலா, விவசாயம், விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் எட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.
கையெழுத்தான ஒப்பந்தங்களில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நீரியல் ஆய்வு (hydrography), இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர தளவாட ஆதரவு மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பணிக்குழு ஆகிய ஒப்பந்தங்கள் முக்கியமானவை
மேலும், பேரிடர் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, கடல்சார் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.
புதிய ‘கடல்சார் பாதுகாப்பு உரையாடல்’ (Maritime Security Dialogue) ‘இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி’யின் (Indo-Pacific Oceans Initiative) கடல்சார் பாதுகாப்புப் பிரிவு மற்றும் ‘உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி’ (Global Biofuels Alliance) ஆகியவற்றில் நியூசிலாந்து இணைவதை இருநாட்டு தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘கிவி பழத்திற்கான செயல் திட்டம்’ மற்றும் நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கிவி பழத்திற்கான இரண்டு புதிய ‘சிறப்பு மையங்கள்’ (Centres of Excellence) அமைப்பதற்கான அறிவிப்புகளும், அண்டார்டிகா ஆராய்ச்சி மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்வி குறித்த புதிய ஒத்துழைப்பு முயற்சிகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2030-க்குள் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த பதினைந்து ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய நியூசிலாந்து ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது வெறும் முதலீடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் நியூசிலாந்தும் ஒரு பகுதியாக இருப்பதற்கான உறுதிப்பாடு என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், வேகமான டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடான இந்தியா, வெறும் சந்தை மட்டுமல்ல உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன்’ திட்டத்தின் கீழ் 100 நகரங்களில் 8,000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி நகர்ப்புற போக்குவரத்து, நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட நியூசிலாந்து வர்த்தகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் கலாச்சார விழுமியங்களுக்கும் மாவோரி மரபுகளுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைத்த பிரதமர் மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தக உறவை உருவாக்கும் வகையில், மாவோரி நிறுவனங்களையும் கருத்தில் கொண்டே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இருதரப்பு உறவுகளுக்கும் புதிய உத்வேகத்தையும் புதிய ஆற்றலையும் பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணம் கொடுத்துள்ளது.
















