புதிய கல்விக் கொள்கை நமது கல்வியை காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்கும் ஒரு முக்கியமான முயற்சி என, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி. ஜி. வைஷ்ணவா கல்லூரியின் 59 ஆவது பட்டமளிப்பு விழாவில் 3 ஆயிரத்து 225 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர், சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் பழக்கம் குறைந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். நமது பாரம்பரிய குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கும் நடைமுறை இருந்ததாகத் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை நமது கல்வியை காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்கும் ஒரு முக்கியமான முயற்சி என்றும், அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் கூறலாம்… ஆனால் அதை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
















