கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்துக் கொல்லப்பட்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுசீந்திரம் அடுத்துள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் என்பவர், தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்திருந்தார். அந்தக் கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்யப்படுவதாகக்கூறி, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சபரி வர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் அங்கு குவிந்தனர். தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தனது மகனிடம் அடிக்கடி லஞ்சம் பெற்று சென்றதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். போலீஸ் தாக்குதலில் சபரி வர்மன் இறந்ததாகக்கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்வை நீதிபதி முன்பு வீடியோ பதிவு மூலம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















