உலகளாவிய புவிசார்-வியூகப் போட்டியின் மையப்புள்ளியான இந்திய-பசிபிக் மண்டலத்தின் எதிர்காலத்தை பிரதமர் மோடியின் இந்தோனேசியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணம் கச்சிதமாக வடிவமைத்துள்ளது, அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிக பரபரப்பான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இந்திய -பசிபிக் பகுதியில் இந்தியாவின் மிக நெருங்கிய வியூகக் கூட்டாளிகளில் ஒருவராக ஆஸ்திரேலியா இருக்கும் நிலையில், நியூசிலாந்தும் இப்போது அதே பகுதியில் வலிமை பெற்று வருகிறது. இந்த மூன்று நாடுகளுக்கும் பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.
“முத்துக்களின் சரம்” கொள்கையின் கீழ் துறைமுகங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வியூக ரீதியிலான முதலீடுகள் மூலம் தனது ஆதிக்கத்தை இந்திய பசிபிக் பெருங்கடலில் சீனா விரிவுபடுத்தி வருகிறது.
தென் சீனக் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சீனாவின் துறைமுக வலைப்பின்னல், உள்கட்டமைப்பு முதலீடுகள் எதிர்காலத்தில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் பயன்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
இதற்கு, ஜிபூட்டியில் சீனாவின் முதல் வெளிநாட்டு கடற்படைத் தளம், பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம், இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகம் மற்றும் மியான்மரில் உள்ள கியாக்பியூ துறைமுகம் ஆகியவை குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
இந்நிலையில் இனி புவிசார் அரசியலில் சீனாவின் வியூகம் செல்லுபடி ஆகுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவின் “முத்துக்களின் சரம்” கொள்கைக்கு மாற்றாக 2018-ல், 18-வது ஷாங்க்ரி-லா கூட்டத்தில் பிரதமர் மோடி சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான நாட்டின் புதிய இந்திய-பசிபிக் தொலைநோக்குப் பார்வையை முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதாவது பாரம்பரிய ராணுவக் கூட்டணிகளுக்கு மாறாக, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கான மரியாதை, ஆசியான் அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா இந்த வியூகத்தை உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த இந்திய பசிபிக் வியூகமே, ராஜதந்திரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக வேறு வடிவத்தை இப்போது பெற்றுள்ளது.
ஒரு தற்காலிகக் கூட்டணியாக சீனா கருதிய இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் குவாத் கூட்டமைப்பின் செயல்திட்டம் படிப்படியாக விரிவடைந்து வருகிறது.
‘மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பதே கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல்சார் இருப்பையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த வாய்ப்பாக உள்ளது.
மேலும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் கடற்படை உறவுகளையும் வலுப்படுத்தும் விதமாக சீஷெல்ஸ், மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளுடனான ஒத்துழைப்பையும் இந்தியா ஆழப்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான SAGAR மாலா திட்டம், இந்திய பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகள், தடுப்பூசி மருத்துவ நிவாரண உதவிகள் மற்றும் கடல்சார் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் என பல்வேறு முயற்சிகள் மூலம் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் இந்த புதிய அணுகுமுறை இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய நாடுகளுக்கு, ஒரே ஒரு வல்லரசு நாட்டை மட்டும் அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. மேலும், அந்நாடுகள் தங்கள் வியூகக் கூட்டணிகளைப் பன்முகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
சொல்லபோனால் இந்தியாவின் Act East கொள்கையே படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மிகவும் விரிவான ‘இந்திய-பசிபிக் கொள்கை’யாக மாறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் நல்லுறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் இந்தியாவின் ‘பல்முனை ஈடுபாடு’ (multi-alignment) என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியாவின் இந்திய- பசிபிக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பரந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி அதிகரித்து வரும் சூழலில், யாருக்கு அதிக துறைமுகங்கள் உள்ளன என்பது முக்கியமல்ல; மாறாக, அப்பிராந்தியத்தில் யார் மீது அதிக நம்பிக்கை உள்ளது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதில் தான் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைப்பை’ உருவாக்க, ஒத்துழைப்பு, இறையாண்மை சமத்துவம் மற்றும் பன்முகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் ‘இந்திய பசிபிக்’ கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
















