இமயமலையில் உருவாகும் பனிப்பாறை ஏரிகள் உடைந்து வெளியேறும் தண்ணீர் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்தும் ஐந்து மாதங்களுக்கு முன்பே நேபாளத்துக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், நேபாள அரசு அதைப் புறக்கணித்தன் விளைவை அந்நாட்டு மக்கள் இப்போது எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
நேபாளத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், பல பகுதிகளை இவ்வாறு சின்னாபின்னமாக்கிவிட்டது. பாறைகள், மண் மற்றும் பனிக்கட்டிகள் கலந்த வெள்ளம் ஆற்றுப்பாதைகள் வழியாக வேகமாக பாய்ந்து குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் என எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கியது.
ஆனால் இந்த பேரழிவு திடீரென உருவானது அல்ல என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே, இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது குறித்தும், பனிப்பாறை ஏரிகள் உடைந்து திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்தும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையமான ICIMOD வெளியிட்ட இரண்டு ஆய்வறிக்கைகள் எச்சரித்திருந்தன.
பனிப்பாறைகள் என்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் மிகப்பெரிய பனிப்பரப்புகள் ஆகும். வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் போது இந்த பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. உருகும் பனிநீர் மலையின் பள்ளத்தாக்குகளில் தேங்கி, மிகப்பெரிய பனிப்பாறை ஏரிகளை உருவாக்குகிறது.
இந்த ஏரிகளை தடுத்து நிறுத்துவது பெரும்பாலும் பனி, பாறைகள் மற்றும் மண் கலந்த இயற்கை தடுப்புகள்தான். இந்த இயற்கை அரண்களில் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பனிப்பாறை, பாறை சரிவு போன்றவை ஏரிக்குள் விழுந்தாலோ மிகப்பெரிய அளவில் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறக்கூடும்.
இதுதான் Glacial Lake Outburst Flood எனப்படும் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம். இது ஒரு சாதாரண வெள்ளத்தைப் போல மெதுவாக வருவதில்லை. அதைத் தான் நாம் நேபாளத்தில் கண்கூடாக பார்த்தோம்…
இமயமலைப் பகுதியில் நிலவும் இதுபோன்ற ஆபத்து குறித்து பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ICIMOD வெளியிட்ட ஆய்வுகள், இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக சுருங்கி வருவதையும், அதன் காரணமாக பனிப்பாறை ஏரிகளின் அபாயம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தன.
பொதுவாக மலையிலிருந்து உருவாகும் ஆறுகள் கீழ்நோக்கி பாயும்போது, பல நாடுகளையும் விளைநிலங்களையும் கடந்து செல்கின்றன. அதனால் இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக நாம் கடந்து செல்ல முடியாது.
நேபாளத்தில் ஏற்கெனவே இதுபோன்ற வெள்ளங்கள் பலமுறை பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் திபெத் பகுதியில் பாறைகள் மற்றும் மண் காரணமாக தண்ணீர் தேங்கி புதிய ஏரி போன்ற அமைப்பு உருவாகியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த நீர்த்தேக்கம் உடைந்தால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இமயமலையில் உருவாகும் இந்த மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான கண்காணிப்பு அமைப்புகள், துல்லியமான முன்னெச்சரிக்கை முறை மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றும் திட்டங்கள் அவசியம் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐந்து மாதங்களுக்கு முன்பே சர்வதேச அமைப்பு எச்சரித்த போதிலும், அதற்கு செவிசாய்க்காதது நேபாள அரசின் தவறு. இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது மலைகளின் பிரச்சினை மட்டுமல்ல, அதன் கீழ் வாழும் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்துக்கான எச்சரிக்கை மணி.
















