மயிலாடுதுறையை சேர்ந்த மூன்று பேர் நேபாள வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் அவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் உட்பட 57 பேர் கும்பகோணத்தில் இருந்து 13 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அனைவரும் சிக்கி தவித்த நிலையில் கடும் முயற்சியில் மயிலாடுதுறையை சேர்ந்த மணிமேகலை, ரெத்தினகுமார், பொன் பூங்குழலி ஆகியோர் உயிர்பிழைத்தனர். இவர்களின் நிலை குறித்து அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும் பத்திரமாக மீட்டனர்.
மத்திய மாநில அரசுகளின் முயற்சியில் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்ட மூவரையும் வட்டாட்சியர் விஜயராகவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களது உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்பளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தங்களை முதலில் சந்தித்தது மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர்தான் எனவும் தங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுத்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்தனர்.
















